மதராசியக் கலாச்சாரம்

மதராசியக் கலாச்சாரம் (Madrasian culture) என்பது வரலாற்றுக்கு முந்தைய தென்னிந்தியாவில் வாழ்ந்த ஒரு கலாச்சாரமாகும்[1]. இதை கீழைப் பழங்கற்காலக் கலாச்சாரம் என்றும் அழைக்கிறார்கள். இந்நாகரிகம் பழைய கற்காலத்திற்கு முன்னரே தழைத்தோங்கி இருந்தது. அதாவது சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலத்திற்கு முன்னரே மதராசியக் கலாச்சாரம் இருந்ததாக நம்பப்படுகிறது. இக்கலாச்சாரம் தொடர்புடைய தொல்பொருட்கள் முதன்முதலில் அதிரம்பாக்கம் என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்டன. இவ்வூர் மதராசு எனப்படும் தற்போதைய சென்னைக்கு அருகில் உள்ளதால், இக்கலாச்சாரம் மதராசியக் கலாச்சாரம் என்று அழைக்கப்பட்டது.[2] அதன் பின்னர் இப்பகுதியைச் சார்ந்த பல்வேறு இடங்களில் இக்கலாச்சாரத்துடன் தொடர்புடைய தொல்கருவிகள் காணப்பட்டன. இருமுக கற்கோடரிகள், வெட்டும்கற்கள் போன்ற கற்கருவிகள் இக்கலாச்சாரத்தின் தொல்பொருட்களாக கண்டெடுக்கப்பட்டன.[3]. இவை தவிர தட்டையான கற்கருவிகள், குறுனிக்கற்கள் மற்றும் வெட்டுக்கத்திகள் போன்றனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இக்கற்கருவிகள் யாவும் உருமாறிய பாறை வகையான படிவுப் பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. கடையூழிக்கடுத்த இந்தியாவின் இரண்டாம் மழைபொழிவு காலத்தின் ஒரு பகுதியாக இக்கலாச்சாரத்தின் கற்கருவி தொல்பொருட்கள் அடையாளம் காணப்படுகின்றன.[4]

ஆங்கிலேய தொல்லியலாளரும் புவியியலாளருமான இராபர்ட் புருசு ஃபூட் 1863 ஆம் ஆண்டில் இந்த வகையான குறிப்பிட்ட கல் தொழிலகங்களை அதிரம்பாக்கம் தளத்தில் கண்டறிந்தார்.[1] அவருடைய இக்கண்டுபிடிப்புக்குப் பின்னர் இந்த தளம்தான் கீழைப் பழங்கற்காலத் தொல்பொருட்களுக்கு பலம் சேர்க்கும் ஆதாரமாக இருந்து வருகிறது. இங்கு கற்கோடரிகள், மும்முக கற்கருவிகள், வெட்டும்கற்கள், ஒற்றைமுகக் கற்கள், பாறை செதில்கள் போன்ற சிறியதும் பெரியதுமான பல்வேறு வகையான தொல்பொருட்கள் இவ்விடத்தில் கண்டறியப்பட்டன.

2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் சோதனை மற்றும் அண்டக்கதிர் எனப்படும் காஸ்மிக் கதிர் வெளிப்பாடு காலக்கணிப்பு முறை வழியான ஆய்வுகளின் முடிவு தெரிவிப்பது யாதெனில், இங்கு கண்டெடுக்கப்பட்ட மிகப் பழைமையான கற்கருவிகள் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதேயாகும்.[5]

இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புதிய சாதனையான இருமுகத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உண்மையில் முந்தைய காலத்தின் பதிவு என்றே நம்பப்படுகிறது. மதராசியக் கலாச்சாரத்தைச் சார்ந்த மக்கள் குழுக்களாக கூடி வேட்டைக்காரர்களாய் இருந்துள்ளனர். பண்ணை வைத்திருப்பது அல்லது விலங்குகளை வளர்ப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடவில்லை.[1] இக்கற்காலத்தில் கீழைப் பழங்கற்கால மக்கள் குறிப்பாக பாறைக் குகைகளிலும் கூரையாக வேயப்பட்ட குடிசைகளிலும் வாழ்ந்திருக்கின்றனர்.[6]

இதனையும் காண்க

குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 Avari, Burjor (5 சூன் 2007). India, the Ancient Past: a history of the Indian sub-continent from c. 7000 BC to AD 1200. Routledge. pp. 25–. ISBN 978-0-415-35616-9. Retrieved 16 அக்டோபர் 2011.
  2. Sen, Sailendra Nath (1 சனவரி 1999). Ancient Indian History and Civilization. New Age International. pp. 23–. ISBN 978-81-224-1198-0. Retrieved 16 அக்டோபர் 2011.
  3. Reddy (1 டிசம்பர் 2006). Indian Hist (Opt). Tata McGraw-Hill Education. pp. 1–. ISBN 978-0-07-063577-7. Retrieved 16 அக்டோபர் 2011. {cite book}: Check date values in: |date= (help)
  4. Tribal Studies (2007). Mibang, Tamo; Behera, M. C. Mittal Publications. India.
  5. "Early Pleistocene Presence of Acheulian Hominids in South India". Shanti Pappu, Yanni Gunnell, Kumar Akhilesh, Régis Braucher, Maurice Taieb, François Demory, & Nicolas Thouveny Science; 25 March 2011: 331 (6024), 1596-1599.
  6. Sen, Sailendra Nath (1988). Ancient Indian History and Civilization pp. 23. Retrieved July 28, 2013.

மேற்கோள்கள்

உசாத்துணை