வாழ்க்கைப் படி

ஜீவனாம்சம் அல்லது வாழ்கைப் படி என்பது தன் வாழ்க்கையை தானே பராமரித்துக் கொள்ள இயலாத நிலையில் உள்ள ஒருவர், தன்னைப் பராமரித்துக் கொள்ளத் தேவையான தொகையை நீதிமன்ற கட்டளையின்படி பெறும் ஒரு ஈட்டுத் தொகையாகும்.[1]

இந்தியாவில் ஜீவனாம்சம்

தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள இயலாமலும், தன்னைப் பராமரிக்க வேண்டியவர் கைவிட்ட நிலையில் இருக்கும் ஒரு இந்தியக் குடிமகனுக்கு இந்திய குற்றவியல் சட்டத்தின் (Criminal Procedure Code) பிரிவு 125, 126, 127 மற்றும் 128இன் படி பெறப்படும் தொகையே சீவனாம்சம் ஆகும். ஷா பானு பேகம் சீவனாம்ச வழக்கின் தீர்ப்புக்குப் பின் இசுலாமியப் பெண்கள் மட்டும் இந்திய குற்றவியல் சட்டத்தின்படி சீவனாம்சம் கிடைக்காது. அதற்கு பதிலாக முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 (THE MUSLIM WOMEN (PROTECTION OF RIGHTS ON DIVORCE) ACT, 1986) இன் படியே சீவனாம்சம் வழங்கப்படுகிறது.

சீவனாம்சம் தொகை பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள்

இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 125, 126, 127 மற்றும் 128இன் கீழ்:[சான்று தேவை]

  1. தன் வாழ்க்கையை பராமரித்துக் கொள்ள இயலாத கணவனால் திருமண முறிவு அடைந்த மனைவி.
  2. தன் வாழ்க்கையை பராமரித்துக் கொள்ள இயலாத மனைவியால் திருமண முறிவு அடைந்த கணவன்.
  3. தன் வாழ்க்கையை பராமரித்துக் கொள்ள கொள்ள இயலாத சட்டம் அங்கீகரிக்கும் மற்றும் சட்டம் அங்கீகரிக்காத மைனர் குழந்தைகள்.
  4. உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டிருக்கும் வயது வந்த சட்டப்பூர்வமான அல்லது சட்டம் அங்கீகரிக்காத ஒருவரின் மகன் அல்லது மகள்
  5. தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத தாய் மற்றும் தந்தை.

மேற்கூறிய இவர்கள் அனைவரும் தன்னுடைய கணவர், தகப்பன் மற்றும் பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கோர இந்தப் பிரிவு வழிவகை செய்கிறது. இந்தச் சட்டப் பிரிவில் மனைவி என்ற சொல் சட்டப்பூர்வமான மனைவியை மட்டுமே குறிக்கும். மேலும், கணவரால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் மறுமணம் செய்யாத பட்சத்திலும், எந்தவிதமான நிரந்தர ஜீவனாம்சம் பெறாத பட்சத்திலும், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள எந்தவிதமான வருமானமும் இல்லாத பட்சத்திலும் இந்தச் சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம் கோர இயலும்.

மைனர் குழந்தைகளுக்கு தாயே காப்பாளராக இருந்து சீவனாம்ச வழக்கு தாக்கல் செய்ய இயலும், இது சட்டம் ஏற்றுக் கொள்ளாத குழந்தைக்கும் பொருந்தும். மேலும் சீவனாம்ச வழக்கு நிலுவையில் இருக்கும் போது இடைக்கால ஜீவனாம்சம் கோரவும் இந்தச் சட்டத்தில் இடமுண்டு.

இதையும் காண்க

மேற்கோள்கள்

  1. ஜீவனாம்சம் ஏன்? எப்படி? எவ்வளவு?

வெளி இணைப்புகள்